ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட முன்வரைவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்த சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான சட்ட முன்வரைவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்வரைவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதற்கான சட்டமன்ற கூட்டம் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சட்ட வரைவு மீதான விவாதத்திற்கு பிறகு, அது சட்டமாக நிறைவேற்றப்படும்.
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது கிடைக்காத்தால் ஏமாற்றமடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், ஜனவரி 15 ஆம் நாள் தொடங்கி அலங்காநல்லூரில் நடத்திய போராட்டத்திற்கு அடுத்த நாள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரிடத்திலும் ஆதரவு பெற்று சுமார் ஒரு வாரம் நடைபெற்ற பேராட்டத்திற்கு பிறகு, மத்திய மாநில அரசுகள் இணைந்து, மாநில அரசின் ஒரு அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தன.
ஆனால், தற்காலிக தீர்வு வேண்டாம், ஐல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர தீர்வு வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், தங்களுடைய கோரிக்கை ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் தற்போது கலைந்து செல்லலாம் என்றும், நிரந்தர சட்டத்தை கூடிய சீக்கிரம் இயற்றாவிட்டால் பின்னர் போராடலாம் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு முன்னோடிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
ஆனால், இன்று காலை முதல் சென்னை போர்க் களமாகி, பரபரப்பாக காணப்படுகிறது. ஆங்காங்கு சில வன்முறை, தடியடி மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், அவசர சட்டத்திற்கு பதிலாக சட்டத்தை கொண்டு வர தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த சட்ட முன்வரைவு மீது விவாதம் நடைபெற்ற பிறகு இன்றே சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை