ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலங்காநல்லூரில் தொடரும் போராட்டம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரி அலங்காநல்லூரில் காலை முதல் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இரவாகியும் தொடருகிறது.
காலம் காலமாக அலங்காநல்லூரின் அடையாளமாக இருப்பது ஜல்லிக்கட்டு. உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், தடை காரணமாக பொலிவிழந்த நிலையில், இந்த முறை இளைஞர்களின் தன்னெழுச்சி அலங்காநல்லூரை போர்களம்போல காட்சியளிக்கச்செய்தது.
சென்னை, நாமக்கல், புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக வலைதளங்கள் மூலம்ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அலங்காநல்லூருக்கு வரும் 4 வழிகளும் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதையும் மீறி, காலை 9 மணி அளவில் பெருமளவிலான இளைஞர்கள், அலங்காநல்லூர் வாடிவாசல் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் பேரணி நடைபெற்றது. இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் இரண்டு கிலோமீட்டர்தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனையடுத்து அலங்காநல்லூர் காளியம்மன் கோவிலில் உள்ள காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டன. அப்போது சில காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், அலங்காநல்லூரில் இளைஞர்கள் கூட்டம் கலையாமல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர் நிகழ்வுகளால் அலங்காநல்லூர் முழுவதுமே ஸ்தம்பித்துபோனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலங்காநல்லூரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல் ஏற்பாடுகளை மதுரை சரக டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
காலை சுமார் 9 மணிக்குத் தொடங்கிய போராட்டம் 11 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று காலை முதல் கூடியுள்ள பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து கலைய மறுத்து அதே இடத்திலேயே கூடியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட இளைஞர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை